உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்ததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

Published On 2022-01-26 15:48 IST   |   Update On 2022-01-26 15:48:00 IST
நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்ததை கண்டித்து கொள்முதல் நிலையத்தை வேலி அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் அய்யனார் கோயில் அருகே கடந்த 9 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அன்னவாசல், கழனிவாசல், அகரஅன்னவாசல், வடகரை, மாந்தை, வாடக்குடி, மாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 980- க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர்.

தற்போது சம்பா அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடம் மாற்றம் செய்து ஒதுக்குபுறமாக உள்ள மாங்குடி கிராமத்தில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள், ஏற்கனவே இயங்கி வந்த இடத்திலேயே செயல்பட வலியுறுத்தி மாங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேலி அமைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்ந போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர் சின்னதுரை, விவசாய சங்கத் தலைவர் சாமியப்பன், செயலாளர் முருகன், விவசாய சங்கத்தினர் இளையராஜா, கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News