உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில், 17 ஊராட்சிகளில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக உள்ளனர்.
இதனிடையே இந்த 17 ஊராட்சிகளில் அண்மையில் நியமிக்கப்பட்ட பணிதள பொறுப்பாளர்களை கிராம ஊராட்சி தீர்மானம் இல்லாமல் தன்னிச்சையாக ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்து நியமித்துள்ளதாக கூறி அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள் 17 பேர் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர்களை அமர சொல்லாமல் மரியாதை குறைவாக நடத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்கள் அங்கிருந்து வெளியேறி, ஒன்றிய அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த சீர்காழி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்படவில்லை.
போராட்டம் தொடர்ந்த நிலையில் மாலை தேர்தல் துணை தாசில்தார் செந்தில் குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர்களை உள்ளே அழைத்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் கோரிக்கை ஏற்கபடாததால் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த அசோகன், மதியழகன், அஞ்சம்மாள், தாமரை செல்வி திருமாறன், விஜயன், மாலினி, வசந்தி கிருபா நிதி, தனலட்சுமி அன்பழகன், தெட்சிணாமூர்த்தி, சரளா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேரும் அங்கிருந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவகத்திற்கு சென்று கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்ததிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதன்படி ஊராட்சிமன்ற தலைவர்களை நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை சார்பில் உறுதியளித்ததின் பேரில் தற்காலிகமாக தர்ணா போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.