உள்ளூர் செய்திகள்
சொக்கநாதர்பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் ரதயாத்திரை
சீர்காழியில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சொக்கநாதர்பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் ரதயாத்திரை திரளான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட அணிகொண்டகோதை உடனாகிய முல்லைவனநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் 27ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதையடுத்து, 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
இதனிடையே திருநின்றவூர் லட்சுமிபுரீஸ்வரர்சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்காக தருமபுரம் மடத்தில் உள்ள ஆத்மாரத்த பூஜை மூர்த்தியான சொக்கநாதர்பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் திருநின்றவூர் சென்று கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து அங்கிருந்து திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சொக்கநாதர் பெருமானுடன் தருமபுரம் ஆதீனம் திருநின்றவூரிலிருந்து ரதயாத்திரையாக புறப்பட்டு சீர்காழி வருகைபுரிந்தார்.
கடந்த 1991ம் ஆண்டு சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது சீர்காழி பகுதியில் பாதயாத்திரையாக தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் முன்னிலையில் சொக்கநாதர்பெருமான் எழுந்தருளி பக்தர்கள் தரிசனம் செய்தநிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு
பிறகு தற்போது சீர்காழியில் சொக்கநாதருடன் தருமைஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ரதயாத்திரையாக வருகைதந்தநிலையில், சீர்காழி உப்பனாறு பாலம் அருகே நகர எல்லை பகுதியில் மதிமுக மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளர் மார்கோனி தலைமையில் பொதுமக்கள், பக்தர்கள், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினர் பூர்ண கும்ப மரியாதை வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சீர்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்கள் சார்பில் அதன் தாளாளர் ராஜ்கமல் விதிபி நடுநிலைப்பள்ளி சார்பில் பள்ளிச் செயலர் சாமிநாதன், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கடவாசல் ரமணன், முத்துக்குமார், வெங்கட்ராமன், சீர்காழி சைவ வேளாளர் சங்கம் சார்பில் பண்ணை.சிவா, சந்திரன், கார்த்தி, சியாமளா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிதரன், அதிமுக ஜெ பேரவை செயலர் ஏவி மணி, அதிமுக நகர செயலாளர் வினோத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு நின்று பூர்ண கும்பமரியாதையுடன் ரதயாத்திரையில் வருகை தந்த தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றனர்.
தொடர்ந்து சொக்கநாதர்பெருமானை தரிசனம் செய்து, ஆதீனத்திடம் அருளாசி பெற்றனர். சீர்காழி பிரதான வீதிகளின் வழியாக ரதயாத்திரை சென்றது.அப்போது சீர்காழி ஆபத்துகாத்தவினாயகர்கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமிதரிசனம் செய்தார்.
பின்னர் எடமணல் காசிவிஸ்வநாதர் கோயிலிலும் தருமபுரம் ஆதீனம் ரதயாத்திரைக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.அதன்பின்னர் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயிலுக்கு ரதயாத்திரை சென்றடைந்தது.