காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதி மீறல்- திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கு அபராதம்
காஞ்சிபுரம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
முகூர்த்த நாளான நேற்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணங்கள் எளிய முறையில் நடந்தன.
ஏராளமான பொதுமக்கள் திருமண அழைப்பிதழ்களை காட்டியபடி வாகனங்களில் திருமண விழாவிற்கு சென்றனர். இதனால் வழக்கமான முழு ஊரடங்கு நாட்களை விட வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோருக்கு காஞ்சிபுரம் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியதாக 1,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு படி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 109 வாகன சோதனை சாவடி அமைத்து 1,746 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய 379 மோட்டார் சைக்கிள், 10 கார், 12 ஆட்டோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் முககவசம் அணியாமல் சுற்றிய 89 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.