உள்ளூர் செய்திகள்
இயற்கை முறையில் நிலத்தடி நீர் வடிகட்டப்படும் இடம்.

இயற்கை முறையில் காவி நீரை வடிகட்டி பயன்படுத்தும் மக்கள்

Published On 2022-01-24 14:41 IST   |   Update On 2022-01-24 14:41:00 IST
கடவாசல் ஊராட்சியில் இயற்கை முறையில் காவி நீரை வடிகட்டி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர 
கடவாசல் ஊராட்சி உள்ளது. 

இந்த ஊராட்சியில் மேலத்தெரு, கீழத்தெரு, பள்ளிவாசல்தெரு, 
காந்திநகர் ஆகிய பகுதிகளில் 450 வீடுகளில் 2600 பேர் வசித்து வருகின்றனர். 

இந்த கிராம பகுதியில் நிலத்தடி நீர் காவிநீராக மாறி விட்டதால் 
குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே இயற்கை முறையில் 
நிலத்தடி நீரை வடிகட்டும் முறையை பின்பற்றி குடிநீர் இந்த ஊராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த முறையில் மணல் மற்றும் கூழாங்கற்கள் நிரப்பப்பட்ட இரண்டு தொட்டிகளில் நிலத்தடி காவி நீர் மின் மோட்டார் மூலம் 
வெளியே குழாய் வழியே கொண்டு வரப்பட்டு ஊற்றப்படுகிறது.

பின்னர் அந்த நீர் அப்படியே வடிகட்டப்பட்டு மணல் மற்றும் 
கூழாங்கற்கள் அடியில் சென்று, நிலத்தடி நீர் தேக்க தொட்டிக்கு சென்று தேங்குகிறது.

பின்னர் அங்கிருந்து மின் மோட்டார் உதவியுடன் குழாய் மூலமாக அருகாமையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டு தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து 
குழாய்கள் மூலம் அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் 
வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் வடிகட்டி கொண்டு வரப்படும் குடிநீர் 15000 லிட்டர் 
கொள்ளளவு உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து அப்பகுதி கிராம மக்களுக்கு 
வழங்கப்பட்டு வருகிறது. 

மணல் மற்றும் கூழாங்கற்கள் வழியே தண்ணீர் செல்லும்போது 
காவி மட்டும் மணல் மற்றும் கூழாங்கற்களில் தங்கிவிடுகிறது.

இதன் மூலம் வடிகட்டப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. கடந்த 
20 வருடங்களாக இயற்கை முறையில் வடிகட்டப்பட்ட இந்த தண்ணீர் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நிலத்தடி காவி நீரை வடிகட்ட பயன்படுத்தப்படும் மணல் மற்றும் கூழாங்கற்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றபடுவதாக ஊராட்சி சார்பில் தெரிவித்தனர். 

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கடவாசல் ஊராட்சி பகுதிக்கு குடிநீர் கிடைத்தாலும் இயற்கை முறையில் வடிகட்டப்பட்ட இந்த நீர் எந்த நேரமும் இந்த கிராம மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் எந்த நேரமும் தட்டுப்பாடின்றி போதிய அளவு தண்ணீர் எந்த நேரம் கிடைத்து வருகிறது என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Similar News