உள்ளூர் செய்திகள்
4 வழிச்சாலை விரிவாக்க பணியைதடுத்து நிறுத்திய விவசாயிகள்
நிலத்துக்கு குறைந்த சந்தை மதிப்பு கொடுப்பதால் 4 வழிச்சாலை விரிவாக்க பணியைவிவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடுக்காய்மரம்
கிராமத்தில் விழுப்புரத்திலிருந்து&நாகப்பட்டினம் செல்ல
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி நடைபெறத் தொடங்கியது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதிகாரிகள் ஊழியர்கள்
சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரத்துடன் சாலை
அமைக்கும் பணியை தொடங்கினர்.
விவசாய நிலங்கள் தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ள
நிலையில் இந்த பணி தொடங்கியதால் அப்பகுதியைச் சேர்ந்த
கடுக்காய் மரம், புத்தூர், குமிளங்காடு ஆகிய கிராமங்களைச்
சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் திரண்டு
வந்து சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன்
எந்திரத்தை தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள்
கூறுகையில், சாலை அமைக்கும் பணிக்காக உரிய உத்தரவு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு அதிகாரிகள் விவசாயிகளிடம் சாதாரணமாக விளைநிலங்களின் விற்பனை
மதிப்பை விட மூன்று மடங்கு அதிகமாக சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு தருவதாக உறுதி அளித்ததனர்.
ஆனால் அதனை செய்யாமலும், உரிய உத்தரவு விவசாயிகளுக்கு வழங்காமலும் சாலை அமைக்கும் பணியை பொக்லைன் எந்திரம் மூலம் துவங்கியுள்ளனர். இதற்கான உத்தரவை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்தால்தான் சாலை அமைக்கும் பணியை தொடரலாம் என்றனர்.
பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் மட்டுமே சாலை அமைக்கும்
பணி தொடங்கியுள்ளது. விவசாய நிலங்களில் சாலை அமைக்கும்
பணி உரிய உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே தொடரும் என்றனர்.
அதனைத் தொடர்ந்து அரசுக்குச் சொந்தமான இடத்தில் மட்டும் சாலை அமைக்கும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யும்
பணி நடைபெற்றது.
சாலை அமைக்கும் பணியை விவசாயிகள் திரண்டு வந்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.