உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து

Published On 2022-01-22 10:00 IST   |   Update On 2022-01-22 10:00:00 IST
கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அண்ணன்-தம்பியை கத்தி மற்றும் சாவியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் ஆனந்தாநகர் தாகூர் வீதியை சேர்ந்தவர் ராம மூர்த்தி (வயது60). இவர் திலாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணாசிங் என்பவருக்கு பணம் கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கிருஷ்ணாசிங் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என தெரிகிறது.

மேலும் கிருஷ்ணாசிங் தான் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்துக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராம மூர்த்தி தனது தம்பி செல்வகுமாரிடம் கோரிமேடு தட்சணாமூர்த்திநகரில் உள்ள வீட்டுமனையை பார்க்க சென்றார். அப்போது அங்கு செல்லும் வழியில்  கிருஷ்ணாசிங் எதிரில் வந்தார். 

இதையடுத்து கிருஷ்ணாசிங்கை தடுத்து நிறுத்தி ராமமூத்தியும் அவரது தம்பி செல்வகுமாரும் எங்களிடம் ரூ-.4 லட்சத்தை வாங்கிகொண்டு வீட்டை காலி செய்து விட்டு எங்கு சென்றாய் என கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணாசிங் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் இதுபற்றி தனது மகனுக்கு போனில் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து கிருஷ்ணாசிங் மகன் சிலருடன் அங்கு வந்தார். அவர்கள்  இரும்பு பைப்பால் ராமமூர்த்தியையும் அவரது தம்பி செல்வகுமாரையும் சரமாரியாக தாக்கினர்.

மேலும் ராமமூர்த்தியை கத்தியாலும் செல்வகுமாரை மோட்டார் சைக்கிள் சாவியாலும் குத்தினார்கள். இதில் வலி தாங்காமல் இருவரும் அலறி போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றதால் கிருஷ்ணாசிங், அவரது மகன் மற்றும் அவர்களுடன் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த தாக்குதலில் காய மடைந்த ராமமூர்த்தி மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து ராமமூர்த்தி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்&தம்பியை கத்தி மற்றும் சாவியால் குத்திய கும்பலை தேடி வருகிறார்கள்.

Similar News