உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மாத்திரைகள் பறிமுதல்

Published On 2022-01-22 02:47 GMT   |   Update On 2022-01-22 02:47 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக உகாண்டா நாட்டை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த பெண் ஜுடித் டிவினோம் வெம்பேசி (வயது 29) என்பவர் வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது உள்ளாடைக்குள் 108 மாத்திரைகள் இருந்தன. அந்த மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் அவை, ஹெராயின் போதை பவுடரை மாத்திரைகளாக மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.7 கோடி மதிப்புள்ள 1 கிலோ 70 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதை பவுடர்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உகாண்டா நாட்டு பெண் பயணியை கைது செய்தனர். மேலும் போதை பவுடர் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News