உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் மறியல் செய்த இடங்களில் லாரி மூலம் குடிநீர் சப்ளை
வேலூர் சைதாப்பேட்டையில் பொதுமக்கள் மறியல் செய்த இடங்களில் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
வேலூர்:
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன.இதனால் கடந்த 3 மாதங்களாக வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
இதனால் உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.
மேலும் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் சைதாப்பேட்டை, பஜனை கோவில் தெரு மெயின் பஜார் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு ஆற்காடு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை. குடிப்பதற்கும், சமையலுக்கும் காசு கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சைதாப்பேட்டை மற்றும் பஜனை கோவில் தெரு பகுதிகளில் லாரிகள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் சப்ளை செய்தனர்.