உள்ளூர் செய்திகள்
முககவசம்

முழு ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 81 பேர் மீது வழக்கு- முககவசம் அணியாத 742 பேருக்கு அபராதம்

Published On 2022-01-18 11:22 GMT   |   Update On 2022-01-18 11:22 GMT
கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 81 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முககவசம் அணியாத 742 பேரிடம் இருந்து அபராதம் வசூல் செய்தனர்.
கடலூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நாளில் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த 81 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 9 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தவிர நோய் பரவலை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசமும் வழங்கி வருகின்றனர். இருப்பினும் இதை மீறியும் முக கவசம் அணியாமல் சிலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களிடம் அபராத தொகை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 742 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 400 அபராதம் வசூல் செய்யப்பட்டது. கடந்த 1-ந்தேதி முதல் இதுவரை முக கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 ஆயிரத்து 529 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.29 லட்சத்து 19 ஆயிரம் அபராத தொகையை வசூல் செய்தனர்.
Tags:    

Similar News