உள்ளூர் செய்திகள்
கவர்னர் மாளிகை புதுப்பிக்கும் பணி- நீதிபதிகள் தங்கும் விடுதிக்கு தமிழிசை இடம் மாறுகிறார்
கவர்னர் மாளிகை புதுப்பிக்கும் பணி நடைபெறுவதையொட்டி நீதிபதிகள் தங்கும் விடுதிக்கு தமிழிசை இடம் மாறுகிறார்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையையொட்டி கவர்னர் மாளிகை உள்ளது.
பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் கட்டப்பட்ட கவர்னர் மாளிகை பிரெஞ்சு கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புதுவை மாநிலம் சுதந்திரம் அடைந்த பிறகு இந்த மாளிகை கவர்னர் மாளிகையாக செயல்பட்டு வருகிறது.
இங்கு கவர்னர் தங்கும் அறைகள், அலுவலகம், கவர்னர் செயலகம் மற்றும் அலுவலக ஊழியர்களின் குடியிருப்பு ஆகியவை செயல்பட்டு வருகிறது. நீண்டகாலமாக பரா மரிக்கப்படாமல் இருந்த கவர்னர் மாளிகையை இப்போது பராமரிப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
இதனால் மாளிகையிலிருந்து மாற்று இடத்தில் தங்க கவர்னர் முடிவு செய்துள்ளார். கடற்கரை சாலையில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் தங்கும் விடுதியில் கவர்னர் தங்க உள்ளார். கவர்னரின் அலுவலகம் மற்றும் செயலகம் கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி கட்டிடத்தில் செயல்பட உள்ளது.
இந்த வார இறுதியில் கவர்னர் இடம் மாறுவார் என தெரிகிறது. 2 கட்டிடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள், கவர்னருக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.