உள்ளூர் செய்திகள்
புதுவையில் பள்ளி-கல்லூரிகளுக்கு 31-ந்தேதி வரை விடுமுறை
கொரோனா வேகமாக பரவுவதால் புதுவையில் பள்ளி- கல்லூரிகளுக்கு 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 31-ந் தேதி வரை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருவதால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளி கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதே வேளையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வை ஒத்தி வைப்பதாக கல்வித்துறைஅறிவித்தது. இந்த நிலையில் புதுவையில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் கூடி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தை போல் புதுவையில் பள்ளி - கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இதனை அறிவித்தார்.