தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் பலி
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி தனியார் பஸ் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது.
அந்தேவனப்பள்ளி கிராமம் அருகே வரும் பொழுது அதே கிராமத்தை சேர்ந்த குப்பண்ணா மகன் மாரிமுத்து (வயது 42), சரவணன் மகன் பிரசாந்த் (22) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சாலையில் வளைவில் திரும்பும் பொழுது எதிரே வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதி உள்ளனர்.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலை, கை, காலில் அடிபட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மாரிமுத்துவை பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கும், பிரசாந்தை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மாரிமுத்து, பிரசாந்த் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.