உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-01-18 09:44 IST   |   Update On 2022-01-18 09:44:00 IST
நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் ஆயுள் கைதிகளின் மறுவாழ்விற்கு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 14 ஆண்டுகள் கழித்தும் கூட விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். இதன் காரணமாக பலர் 17, 18 ஆண்டுகளாக சிறையிலேயே இருந்து வருகின்றனர்.  மேலும் 14 ஆண்டுகள் கழிந்தவுடன் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த கைதிகளும், அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

தேசிய மனித உரிமை ஆணையமும், மத்திய உள்துறை அமைச்சகமும் கைதிகளை  நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களையும், பரிந்துரைகளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கியுள்ளது.  புதுவையில் மட்டும் இதனை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் தலையீடு உள்ளது. ஆனால், தமிழகத்தில் 10 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள்  கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படு கின்றனர்.

மேலும் ஆயுள்  கைதிகளில் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதன்முறை குற்றவாளிகள் போன்ற வர்களை நன்னடத்தை அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு நீதிபதி தலைமையிலான குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதுபோல் புதுவை அரசும்  ஆயுள் தண்டனை கைதிகளின் மறுவாழ்விற்கு ஒரு வாய்ப்பளிக்க கொள்கை முடிவு எடுத்து நன்னடத்தையுள்ள கைதிகளை, அவர்கள் குடும்பத்தோடு கடைசி காலத்தில் வாழ வழி செய்ய வேண்டும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News