உள்ளூர் செய்திகள்
சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2022-01-18 03:28 GMT   |   Update On 2022-01-18 03:28 GMT
குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45-வது வார்டு வைத்தீஸ்வரன் கோவில் தோப்பு தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 மாத காலமாக சரி வர குடிநீர் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சரி வர குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலேன்கேட் பகுதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த சின்ன காஞ்சிபுரம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், தண்ணீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

மேலும் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நாட்களாக வீணாக கடலில் சென்று கலந்த பின்பும் கூட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News