உள்ளூர் செய்திகள்
முன்பதிவு செய்தால் மட்டுமே புறநோயாளிகளுக்கு சிகிச்சை- ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு
முன்பதிவு செய்தால் மட்டுமே புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கடந்த 3 வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு ஆலோசனைக்கு வருவோருக்கு இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே ஜிப்மரில் கொரோனா தொற்று அபாயத்தை குறைக்க வருகிற 18-ந் தேதி முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிப்மர் டாக்டரிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள், ஜிப்மர் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப் பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். 19-ந் தேதி முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் மட்டுமே நேரடி வருகைக்கு அனுமதிக்கப்படுவர்.
வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஆலோசனைகள் வழங்கப்படும். ஒவ்வொரு துறையும் முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படும். சமூகத்திலும், ஆஸ்பத் திரியிலும் கொரோனா பரவும் அபாயத்தை குறைக்க ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவோருக்கு முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சை அளிக்கப்படும்.
அனைத்து நோயாளிகள், உதவியாளர்கள் முக கவசம் அணிதல், முன்பதிவு செய்தல், ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர், தொலைபேசி மருத்துவ ஆலோனைகளை பின்பற்ற வேண்டும். நோயாளிகளும், உதவி யாளர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவர். அனைத்து அவசர மருத்துவ, அறுவை சிகிச்சை பிரிவுகளும் வழக்கம்போல் இயங்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.