உள்ளூர் செய்திகள்
புதுவையில் 17-ந்தேதி பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும்- எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
புதுவையில் 17-ந்தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப் படுத்தும் நோக்கில் 16-ந்தேதி
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ள ஊழியர்கள், மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏற்படும் சிரமத்தையும், ஒரே நேரத்தில் பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் மக்கள் அதிகம் கூடும் சூழ்நிலை உருவாகி தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு 17-ந்தேதி, 18-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
ஆனால், புதுவையில் அதுபோல் விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஊழியர்கள், மாண வர்கள் தமிழக பஸ்கள் இன்று இயக்கப்படாததால் பொங்கல் கொண்டாட தங்கள் பிராந்தியங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் புதுவை திரும்ப முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, 17-ந்தேதி புதுவையில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும், இந்த விடுமுறையை வருகிற சனிக்கிழமை அன்று வேலை நாட்களாக அறிவித்து ஈடு செய்யலாம்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.