உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் படகு பொங்கல் கொண்டாடப்பட்டது.
சீர்காழி:
தமிழகம் முழுவதும் தை 2-ம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டு பொங்கலன்று தங்களது வீடுகளில் வளர்க்கும் மாடுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, மாடுகளுக்கு நெட்டி மாலைகள் அணிவித்தும், கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசியும் வீதிகளில் உலா வருவது அன்றைய தினத்தில் நடைபெறும்.
அதேபோல் மீனவர்கள் மாட்டு பொங்கல் தினத்தில் தங்களது வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாமல் விளங்கும் படகுகளுக்கு
சிறப்பு பூஜைகள் செய்து படையல் இடுகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் உழவர்கள் எப்படி மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து படைத்து மாடுகளை விரட்டி மாட்டு பொங்கலை கொண்டாடுகின்றனரோ அதேபோல் திருமுல்லைவாசல் மீனவ கிராம மீனவர்கள் தங்களிடம் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைபடகுள் பைபர் படகுகளை பழுதுகள்
நீக்கி, சுத்தம் செய்தனர்.
படகுகளில் வாழைகன்றுகள், கரும்புகள், தோரணங்கள் கட்டியும்,
சந்தனம், குங்குமம் வைத்து, மாலைகள் அணிவித்து அலங்கரித்தனர்.
தொடர்ந்து அவல், பொரி, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வைத்து
சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்த மீனவர்கள், அதன்பின்னர்
தங்களது குடும்பத்தினருடன் படகுகளில் கடலில் உலா வந்து
மீண்டும் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.