உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தீபாவளி, பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.1000 - சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2022-01-16 09:39 IST   |   Update On 2022-01-16 09:39:00 IST
தீபாவளி - பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய பொருட்களுக்கு பதிலாக ரூ.1000 வழங்க வேண்டும் என சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10 பொருட்கள் அடங்கிய ரூ.490 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். பொங்கல் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ந்தேதி முதல்-அமைச்சர் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தப் பகுதியிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்படவில்லை. 

பொங்கல் தொகுப்பில் உள்ள வெல்லம், ஏலக்காய் முந்திரி போன்ற பொருட்கள் பொங்கலன்று வழங்கப்பட்டால்தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். பொங்கல்  முடிவடையும் நிலையில் பெரும்பாலான மக்களுக்கு பொங்கல் தொகுப்பு போய் சேராததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

பொங்கல் பண்டிகை முடிந்த பின் பொங்கல் தொகுப்பு வழங்கி எந்த பயனும் இல்லை. எனவே பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரொக்கமாக ரூ.500,  தீபாவளிக்கு வழங்க வேண்டிய அரிசிக்கு ஈடாக ரூ.500 சேர்த்து  ரூ.ஆயிரத்தை  ஒவ்வொரு குடும்ப அட்டைக்காரர் களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும். குறைந்தபட்சம்  முதலியார்பேட்டை தொகுதியில் மட்டுமாவது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்-அமைச்சர் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Similar News