உள்ளூர் செய்திகள்
உர தயாரிப்பு மையத்தில் தீ எரியும் காட்சி.

நெல்லை மாநகராட்சி உர தயாரிப்பு மையத்தில் தீ விபத்து

Published On 2022-01-15 08:24 GMT   |   Update On 2022-01-15 08:24 GMT
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட சிந்துபூந்துறை உர தயாரிப்பு மையத்தில் நேற்று இரவு தீ பற்றி எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் வந்து போராடி தீயை அணைத்தனர்.
நெல்லை:

நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டல பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதற்காக அங்கு ஏராளமான குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு திடீரென அந்த குப்பைகளில் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அங்குள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 

இதனை அறிந்த பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்தது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 

எனினும் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதும் எரிந்தது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News