உள்ளூர் செய்திகள்
புதுவை-பாகூரில் கடும் பனி மூட்டம் வாகன ஓட்டிகள் அவதி
பாகூர் பகுதியில் பனிமூட்டம் நிலவியது.
புதுச்சேரி:
பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பனிப்பொழிவை பொறுத்தவரை கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளத்தை தமிழகம் மற்றும் புதுவை சந்தித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பனி பெய்ய தொடங்கியது, காலையில் வெயிலும், மாலை நேரத்தில் கடும் குளிரும் நிலவி வந்தது.
அதேபோல் 12-ந்தேதி மாலை முதல் குளிர் நிலவி வந்தது. இரவு நேரம் செல்ல, செல்ல பனி மூட்டமாக காட்சி அளித்தது. பனி மூட்டம் சாலைகள் தெரியாத அளவுக்கு இருந்தது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை ஒளிர விட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது.
பாகூர், குருவிநத்தம், அரங்கனூர், சேலியமேடு, கரைமேடு, கன்னியகோயில், முள்ளோடை, கிருமாம் பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. புதுவை நகர் மற்றும் சுற்று பகுதியிலும் அதிக பனிமூட்டம் காணப்பட்டது.
இந்த பனி மூட்டம் காலை 9 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.