ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு உயிர்ப்பலி: ரூ.41 லட்சத்தை இழந்தவர் தற்கொலை
போரூர்:
கோயம்பேடு, சேமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது41). இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்தார்.
இன்று அதிகாலை தினேஷ் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தினேசின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் சோதனை செய்த போது தினேஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு ரூ41லட்சம் கடன் உள்ளது.வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ஆங்கிலத்தில் தினேஷ் எழுதி வைத்து இருந்தார்.
போலீசார் விசாரணையில் தினேஷ், நண்பர்கள் மற்றும் பலரிடம் கடன் வாங்கி அதை ஆன்லைன் சூதாட்டத்தில் பறி கொடுத்து இருப்பது தெரிந்தது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்து உள்ளார். இதனால் தினேஷ் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
தினேசின் தற்கொலை முடிவுக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.