உள்ளூர் செய்திகள்
நாராயணசாமி

புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2022-01-10 03:01 GMT   |   Update On 2022-01-10 03:01 GMT
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியதால் புதுவையில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் பயனடைவார்கள். தமிழக அரசு நீட் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. அதற்கு தமிழக கவர்னர் தடையாக உள்ளார். மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

மாநில அரசானது மக்கள் நலனுக்காக கொண்டு வருகிற சட்டங்களை நிறுத்துவது எப்படி பொருத்தமாக இருக்கும். நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமர் மோடி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவை அரசு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கியதால் தொற்று அதிகரித்துள்ளது. இதற்கு கவர்னரும், முதல்-அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். கவர்னரிடம், முதல்-அமைச்சர் ஆலோசனை பெறலாம். முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்-அமைச்சருக்கு தான் உண்டு.

புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். கவர்னரிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு வேடிக்கை பார்க்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News