உள்ளூர் செய்திகள்
வில்லியனூரில் புதுமாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை
வில்லியனூரில் புதுமாப்பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்டார்
சேதராப்பட்டு:
வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சதீஷ் என்ற மணிகண்டன் (வயது 27). ஏ.சி. மெக்கானிக்கான இவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது.
இந்நிலையில் நேற்றிரவு மணிகண்டனின் எதிர் வீட்டில் வசிக்கும் சங்கர் அவரது மனைவி ரமணி இருவரும் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். வீட்டின் வெளியே தம்பதியினர் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினர்.
சங்கரின் மைத்துனர் ராஜா மற்றும் இவரது நண்பர்கள் 3 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்று மதுபோதையில் அதிக சத்தத்துடன் அந்த நிகழ்ச்சியில் ரகளை செய்தனர்.
இது அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சதீஷ் தட்டிக் கேட்டார். அப்போது சதீசுக்கும், சங்கர் மற்றும் அவரது மைத்துனர் ராஜா ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
பின்னர் வீட்டில் சிறிது நேரம் தூங்கி விட்டு சதீஷ் வீட்டின் வெளியே வந்தார். அப்போது அங்கு சாலையில் மது அருந்திக் கொண்டிருந்த சங்கர் மற்றும் அவரது மைத்துனர் ராஜா மேலும் 2 பேர் சதீசை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தனர்.
போதையில் இருந்த அவர்களை கண்டதும் சதீஷ் வீட்டிற்குள் செல்ல முயன்றார். உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீசை சரமாரியாக குத்தினர். இதில் சதீசுக்கு கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் விழுந்த சதீசை மீட்டு உறவினர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ் கொலையில் சம்பந்தப்பட்ட சங்கர் அவரது மைத்துனரான வில்லியனூர் அம்மன் நகரைச் சேர்ந்த ராஜா, கண்டமங்கலம் தென்னல் பகுதியைச் சேர்ந்த அசார், புது நகரை சேர்ந்த தமிழ் ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அசார் மீது கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.