உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் ஒளிந்திருந்த பாம்பை வனத்துறை ஊழியர் பிடித்த காட்சி.

இருசக்கர வாகனத்தில் பதுங்கிய நல்ல பாம்பு- சமூக வலைதளங்களில் வைரல்

Published On 2022-01-09 13:53 IST   |   Update On 2022-01-09 13:53:00 IST
மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பை வனத்துறை ஊழியர் பிடித்தார்.
புதுச்சேரி:

புதுவை புதுசாரம் பகுதியில் மரசெக்கு எண்ணை கடை நடத்தி வருபவர் குமரன்.  இவர். வியாபாரம் முடிந்து கடையிலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை  எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். 
அப்போது வாகனத்தின் முன் பகுதியிலிருந்து நல்ல பாம்பு ஒன்று எட்டிப் பார்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமரன் உடனடியாக வாகனத்தை  சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சி பலன்  தராததால் வனத் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர் சண்முகம்  வாகனத்தில் இருந்த பாம்பை பிடிக்க போராடினார்.  ஆனால், அந்த பாம்பு வனத்துறை ஊழியரின் கையில் சிக்காமல் வாகனத்தின் முன் பகுதிக்கும், பின் பகுதிக்கும் சென்று சுமார் ஒரு மணி நேரம் போக்கு காட்டி கொண்டு இருந்தது. 

இதனை அடுத்து மெக்கானிக் உதவியுடன் வாகனத்தை பிரித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோட்டார் சைக்கிளில் பாம்பு இருக்கிறது என்ற தகவல் பரவ  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடியதால் மேலும் பரபரப்பானது.  வாகனத்தில் இருந்த  பாம்பை பிடிக்கும் வீடியோவை  பொதுமக்கள் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.


Similar News