உள்ளூர் செய்திகள்
கைது

நாய் கடிக்க வந்ததால் பெண்களை தாக்கிய வாலிபர் கைது

Published On 2022-01-07 10:23 GMT   |   Update On 2022-01-07 10:23 GMT
பண்ருட்டி அருகே நாய் கடிக்க வந்ததால் பெண்களை தாக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே கொரத்தி கிராமத்தை சேர்ந்தவர் கேசவபெருமாள். (வயது 20) இவர், தனதுவீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த இளங்கோ (33) அந்தவழியாக சென்றார். அவரை கேசவபெருமாள் வீட்டு நாய் கடிக்க ஓடியது. ஆத்திரமடைந்த இளங்கோ நாயை அடிக்க முயன்றார்.

அப்போது கேசவபெருமாளின் பெரியப்பா துளசிதாஸ் மற்றும் அவர்களது உறவினர்கள் எதற்கு நாயை அடிக்கிறாய் என கேட்டனர்.

ஆத்திரமடைந்த இளங்கோ என்னடா நாய் வளர்கிறீர்கள் ரோட்டில் வருவோர், போவோரை கடிக்கிறது என்று கேட்டு அருகில் கிடந்த மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த பெண்களை மானபங்கம் செய்து தாக்கினார்.

இதில் துளசிதாஸ் (55), சங்கர் (50), தனலட்சுமி (42), கேசவபெருமாள், சத்தியலட்சுமி (32) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேசவப் பெருமாள் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்த மற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்கோவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News