உள்ளூர் செய்திகள்
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: பஞ்சாப் அரசே பொறுப்பேற்க வேண்டும்-ரங்கசாமி கண்டனம்
பிரதமர் பாதுகாப்பு குளறுபடிக்கு பஞ்சாப் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் முதல்-அமைச்சரும், கவர்னரும் இணைந்து செயல்பட வேண்டும். கடந்த காலங்களில் இதுபோல இல்லாததால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை. புதுவை கவர்னர் தமிழிசையின் முழு ஒத்துழைப்போடு அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எதிர்கட்சிகள் கூறுவது போல எந்த தடையும் இல்லை.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் குறைந்தவுடன் பிரதமர் மோடியை சந்திப்போம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் முதல்-அமைச்சர்கள் வரை ஊழல் செய்கின்றனர். இதற்கான ஆதரம் உள்ளது என குற்றச்சாட்டை கூறியுள்ளார். அந்த ஆதாரங்களை என்னிடம் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்.
புதுவை அரசு பொறுப்பேற்று 7 மாதங்களில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. அனைத்து அறிவிப்புகளையும், வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றும். கொரோனா பாதிப்பு அதிகமானால் ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய 3 இடத்தை தேர்வு செய்துள்ளோம். டாக்டராக கவர்னர் ஆலோசனை வழங்குகிறார். இதில் என்ன தவறு உள்ளது? மாநில அந்தஸ்து கேட்டு ஆண்டுதோறும் வலியுறுத்துகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். பிரதமர் மோடியை சந்திக்க பயம் என்பது தவறான குற்றச்சாட்டு.
பிரதமர் மோடி மிக நெருங்கிய நண்பர். அவரை விரைவில் கண்டிப்பாக சந்திப்பேன். பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கப்பவிடவில்லை. இதற்கு முழு பொறுப்பையும் பஞ்சாப் அரசு ஏற்க வேண்டும். ஒரு மாநிலத்துக்கு பிரதமர் வரும்போது அதன் முழு பாதுகாப்பையும் மாநில அரசு ஏற்பதுதான் கடமை. பிரதமருக்கு சங்கடத்தை உருவாக்கியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.