உள்ளூர் செய்திகள்
பாலம் விரிசலை சீரமைத்த போலீசார்
கொள்ளிடம் சோதனைசாவடி அருகே பாலத்தின் விரிசலை போலீசார் சீரமைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புராடு உடைந்து கம்பிகள்
வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
இதனால் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தில் செல்லும்
அனைத்து வாகனங்களும் அச்சத்துடன் சென்று வந்தன.
வாகன ஓட்டிகள் மிகுந்த பயத்துடன் வாகனங்களை இயக்கி வந்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், கார் போன்ற வாகனங்களில் செல்பவர்களும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
கடந்த 10 நாட்களாக அதிகாரிகள் பாலத்தின் நடுவே உடைந்த பகுதியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் ஆகியோர் தங்களது சொந்த செலவில் பணியாட்கள் மூலம் தற்காலிகமாக பாலத்தின் நடுவில் ஏற்பட்ட விரிசலை சிமெண்ட்,
ஜல்லி கலந்த கான்கிரீட் கலவையை பாலத்தின் உடைந்த பகுதியில் வைத்து பூசி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பாலத்தின் விரிசலை சரி செய்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் முயற்சியால் பாலத்தின் நடுவில் ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்த கொள்ளிடம் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நிரந்தரமாக பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.