உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பிரதமர் வருகையை தடுக்கவே தமிழகத்தில் ஊரடங்கு - அ.தி.மு.க. கண்டனம்

Published On 2022-01-07 15:34 IST   |   Update On 2022-01-07 15:34:00 IST
பிரதமர் வருகையை தடுக்கவே தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை  கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை திறக்க தற்போதைய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது. 

இவ்விழாவில் பங்கேற்பதோடு, மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்தது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக பிரதமரின் தமிழக வருகையை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் ஊரடங்கும், கொரோனா கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

புதுவையில் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலத்திலிருந்து வந்து புத்தாண்டை கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்துக்கு அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது வாய் திறக்காமல் மவுனமாக இருந்த தி.மு.க. தற்போது பிரதமர் வருகையை அரசியல் நோக்கத்தோடு எதிர்க்கிறது. 

புதுவை மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது எதிர்க்காத தி.மு.க. மலிவு விளம்பர அரசியல் செய்ய தற்போது பிரதமர் வருகையை எதிர்க்கின்றனர். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது. ஆனால் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அடிமை அரசு என விமர்சித்துள்ளார். 

கவர்னர் புதுவை அரசுக்கு உறுதுணையாக உள்ளார். அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைத்து அனுமதியளிக்கிறார். மத்திய அரசும் புதுவை அரசு திட்டங்களுக்கு அனுமதியளித்து வருகிறது. அறிவித்த எதையும் நிறைவேற்றாமல் இருண்ட ஆட்சி நடத்திய காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.
 
தொடர்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டும்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலை இல்லை என்பதையும் கூறி வருகிறோம். 

ரங்கசாமி தலைமையிலான அரசு மழை நிவாரணம், முதியோர் உதவித்தொகை உயர்வு, தீபாவளிக்கு சர்க்கரை, அரிசி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், ரேசன்கடைகள் திறப்பு என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதி கசிவை தடுத்தாலே புதுவையில் இன்னும் பல திட்டங்களை அரசால் நிறைவேற்ற முடியும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News