உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் திங்கட்கிழமை முதல் பொங்கல் இலவச பொருட்கள் விநியோகம் - ரங்கசாமி அறிவிப்பு

Published On 2022-01-07 15:20 IST   |   Update On 2022-01-07 15:20:00 IST
புதுவையில் 10 பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என ரங்கசாமி கூறினார்
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, உலர்திராட்சை உட்பட 10 பொருட்கள் அடங்கிய ரூ.490 மதிப்பிலான பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். இந்த பொங்கல் பரிசு பொருட்களை வரும் 10-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். 

புதுவையில் தேசிய இளைஞர் விழா வரும் 12-ந்தேதி முதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. இப்போது காணொலியில் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி காணொலியில் விழாவை தொடங்கி வைப்பார். அந்தந்த மாநிலங்களில் இருந்தபடியே இளைஞர்கள் இந்த விழாவை கொண்டாடுவர். 

புதுவையில் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுஇடைங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். இலவசமாக முக கவசம் வழங்க அரசு நடடிக்கை எடுத்து வருகிறது. 

புதுவையில் கூடுதலாக 10 ஆயிரம் முதியோர், விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். விடுபட்ட 6 ஆயிரம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கனமழையால் சேதமடைந்த புதுவையின் அனைத்து சாலைகளையும் புதிதாக அமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. விரைவில் அனைத்து சாலைகளும் புதிதாக போடப்படும். 

புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் காவலர் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதி தேர்வு வரும் 19-ந்தேதி நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஐ.ஆர்.பி.என். உட்பட ஆயிரம் காவலர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News