உள்ளூர் செய்திகள்
புதுவையில் மின்கம்பியை மிதித்த 8 மாடுகள் சாவு
புதுவையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 8 மாடுகள் பரிமாக இறந்தன.
புதுச்சேரி:
புதுவை லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் சம்பத் (வயது 36). இவர் 20 மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மாடுகளை தினமும் வயல்வெளி நகர் பகுதியில் உள்ள காலிமனைகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
அதுபோல மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு மேய்ச்சலில் இருந்து மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளார்.
விக்டோரியா நகர் பகுதியில் அவர் மாடுகளுடன் வந்தபோது அங்கு மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. சில நாட்களுக்கு முன் விழுந்த அந்த மின் கம்பி குறித்து அப்பகுதி மக்கள் மின்துறைக்கு புகார் தெரிவித்தும் அதனை சரி செய்யவில்லை என தெரிகிறது.
இதனால் மாடுகளை மின்கம்பி விழுந்து கிடந்த பகுதிக்கு செல்லாமல் சம்பத் ஓட்டி வந்தார். ஆனாலும், 8 மாடுகள் மின்கம்பியை
மிதித்தது. இதில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே அவை பரிதாபமாக உயிரிழந்தன. இதனை கண்ட சம்பத் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து சம்பத் போலீசில் புகார் அளித்தார். முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மாடுகள் குறித்து விசாரணை நடத்தினர். மாடுகளை அடக்கம் செய்யும் பணி நடைபெற்றது.