உள்ளூர் செய்திகள்
மழையால் பானை தயாரிக்கும் பணி பாதிப்பு
மழையால் பொங்கல் பானை தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட கருவி, வேட்டங்குடி, ஆச்சாள்புரம், எடமணல், திருக்கருகாவூர், பழையபாளையம், செம்மங்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் மற்றும் மண் அடுப்புகள், மண்சட்டி தயாரிக்கும் பணி தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் தயார் செய்யப்படும் பொங்கல் பானை, சட்டி, அடுப்பு ஆகியவை விற்பனைக்காக வியாபாரிகள் மூலம் பல்வேறு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில் மண் பானை, அடுப்பு,
சட்டிகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள்
தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக களிமண்ணை பதப்படுத்தி பானைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்பாண்டத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பானை தயாரிக்கும் பக்குவ நிலைக்கு
களிமண்ணை தயார் செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதால்
பொங்கல் பண்டிகைக்கு பானைகள் தயார் செய்யும் பணி
தடைபட்டுள்ளது.
வேட்டங்குடி கிராமத்தில் பானை தயாரிக்கும் தொழிலில்
பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மாவட்ட மண்பாண்ட தயாரிப்பு சங்கத் தலைவர் மாரிமுத்து தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள
கோரிக்கையில், மண்பாண்ட தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது.தொடர் மழையினால் இத்தொழில் செய்வோர்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழைக்காரணமாக பொங்கலுக்கு தயாராகும் மண்பானைகளை
சுட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாத மழையினால்
மண்பாண்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் மண்பாண்ட தொழிலாளர்கள் நிலை அறிந்து மழைக்கால நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
விடுபட்ட மண்பாண்ட தொழிலாளர்களை கணக்கீடு செய்து அவர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் மண்பாண்ட தொழில் நலிந்து வருவதை தடுத்து மாவட்டந்தோறும் மண்பாண்ட தொழிலை இளைஞர் கற்று கொள்ள பயிற்சி கூடங்கள் அமைத்து பாரம்பரியம் மிக்க மண்பாண்ட தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மாரிமுத்துக்கு உதவியாக ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வரும் அவரது மகனும் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.