உள்ளூர் செய்திகள்
உப்பளங்களில் சூழ்ந்துள்ள மழைநீர்.

நாகையில் உப்பு உற்பத்தி பாதிப்பு

Published On 2022-01-03 11:08 GMT   |   Update On 2022-01-03 11:08 GMT
வேதாரண்யத்தில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் 
உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 

தூத்துக்குடிக்கு அடுத்த படியாக உப்பு உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கிறது. 
இத்தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 
10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக பாத்திகளில் தண்ணீர் தேங்கி உப்பு 
உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டும்  மழையால் நிறுத்தப்பட்டிருந்த உப்பு உற்பத்தி கடந்த மாதம் மழை ஓய்ந்து பாத்திகளில் தேங்கிய 
மழைநீர் வடிந்தது. 

மழையால் பாதிக்கப்பட்ட உப்பு பாத்திகளை சரி செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீரென்று பெய்த கனமழையால் உப்பு பாத்திகளில் மீண்டும் மழை நீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது.

இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் 
நிறைவேறும் தருவாயில் இருந்த நிலையில் இந்த 
திடீர் மழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. 

பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி 
தொடங்க ஒரு மாத காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் செலவான நிலையில் மழை 
பாதிப்பால் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். 

குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாய் மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News