உள்ளூர் செய்திகள்
வழக்கு

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டர்- தாய் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2022-01-01 17:35 IST   |   Update On 2022-01-01 17:35:00 IST
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டர் மற்றும் உடந்தையாக செயல்பட்ட தாய் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 41). அரசு பஸ் கண்டக்டர். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 16 வயதில் மகள் இறக்கிறாள். இந்நிலையில் அந்த பெண் தனது மகளை ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இது குறித்து அரியலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிந்து ராதாகிருஷ்ணன், உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் ஆகியோரை கடந்த மாதம் 11-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணியை(59) போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின்பேரில், ராதாகிருஷ்ணன், சிறுமியின் தாய் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள ராதாகிருஷ்ணன், சிறுமியின் தாய் ஆகியோரிடம் நேற்று போலீசார் வழங்கினர்.

Similar News