சீர்காழியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் மீது வழக்கு
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே கட்டாய தடுப்பூசி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இயற்கை வழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இயற்கைவழி வாழ்வியலர்கள் கூட்டமைப்பு, தமிழ் பேரரசு கட்சி பொது செயலாளர் இயக்குனர் கவுதமன், சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம், மக்கள் அறிவியல் இயக்கம் மருத்துவர் பிரேமா கோபாலகிருஷ்ணன், திருநங்கை ரோஸ், பூவுலகில் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த புகழேந்தி, இயற்கை வழி வாழ்வியலார் கூட்டமைப்பு மாநில தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்று கொரோனா ஊசி திணிப்புக்கு எதிராக பேசினர்.
அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால் இதில் கலந்து கொண்ட இயக்குனர் கவுதமன், சுதாகர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவர்கள் மீது சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.