உள்ளூர் செய்திகள்
நாகையில் மீனவர் வலையில் சிக்கிய அதிசய முதலை மீன்
நாகையில் மீனவர்கள் வலையில் அதிசய முதலை மீன் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து இந்த மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய ஒரு நாட்டு படகு மீனவர் வலையில் அதிசய முதலை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீனின் தலை, பற்கள் அச்சு அசலாக முதலை போன்றும், உடல் முதலையின் கடினமான தோல் போன்றும் இருந்தது. வால் பகுதி கொடுவா மீன் போல இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து இந்த மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதில் ஒருசிலர் இது மீனே கிடையாது என்றும் கூறினர். இதனால் இந்த மீனையாரும் வாங்க முன்வரவில்லை. அப்போது அங்கிருந்த ஒருவர் இந்த மீனின் சுவை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வதற்காக முதலை மீனை வாங்கி சென்றார்.
தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மீனவர்கள் வலையில் சிக்கிய இந்த முதலை மீன் 3 அடி நீளமும், 10 கிலோ எடையும் இருந்தது. கரைக்கு கொண்டு வந்து இந்த மீனை வலையில் இருந்து எடுத்தபோது உயிரோடு இருந்ததாகவும், பின்னர் அது இறந்து விட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.