உள்ளூர் செய்திகள்
போராட்டம் (கோப்பு படம்)

சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து நாளை முதல் போராட்டம்

Published On 2021-12-28 16:38 IST   |   Update On 2021-12-28 17:29:00 IST
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும் நாளை முதல் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெப்பதூர் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம்அகோரமூர்த்தி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள், மதியழகன், தாமரைச்செல்வி திருமாறன், தனலட்சுமி அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்மங்குடி ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலினி முருகன், தட்சிணாமூர்த்தி, விஜயன் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து பேசினர்.

கூட்டத்தில் மத்திய அரசின் 15-வது நிதி மானிய குழு அந்தந்த ஊராட்சிகளுக்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் 15-வது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஊராட்சி செயலர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் புதிய ஊராட்சி மன்ற செயலர்கள் பணிநியமனம், பணியிட மாறுதல் செய்ய கூடாது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களை பணி நிரந்தரமாக்கி அவர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும், அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும் நாளை (29-ம் தேதி) முதல் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள் விஜயன், லதா செந்தில் முருகன், துரைராஜ், சோமசுந்தரம், சரளா கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News