உள்ளூர் செய்திகள்
ஓசூரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
ஓசூரில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஓசூர் உழவர் சந்தை பகுதியில் விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உழவர் சந்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் இருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி கவிதா (வயது28) என்பதும், தற்போது அவர் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள பள்ளூரில் தங்கி இருந்து கஞ்சா கடத்தி வந்து ஓசூர் பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர் தனது கூட்டாளிகளான ஆம்பூரை சேர்ந்த அஜீத் (21), ஓசூர் இமாம்பாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகியோருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கவிதா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து ஆயிரம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.