உள்ளூர் செய்திகள்
இழப்பீடு வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்
திருக்கடையூரில் இழப்பீடு வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர்:
விழுப்புரம் முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கொள்ளிடத்தில் இருந்து பொறையாறு வரை உள்ள நிலம் வீடு கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் மாவட்ட தலைவர் சிம்சன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 6-வது நாளான நேற்று பாடையில் ஒருவரை படுக்கவைத்து ஒப்பாரி வைத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோஷமிட்டனர். மார்கழி மாத பனியையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக தொடர்ந்து விவசாய சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.