உள்ளூர் செய்திகள்
புதுப்பட்டினத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு
புதுப்பட்டினத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் கம்மல், 50 கிராம் வெள்ளி நகை மற்றும் ஒரு செல்போன் போன்றவை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் புவனேஸ்வர் நகரை சேர்ந்தவர் காலுஷா (வயது 64) இவர் கடந்த 9-ந் தேதி பூந்தமல்லி பகுதியில் உள்ள தனது மகன் மற்றும் மகளை பார்க்க சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்றுமுன்தினம் பிற்பகல் புதுப்பட்டினத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவரது வீட்டின் ஜன்னலை யாரோ மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் கம்மல், 50 கிராம் வெள்ளி நகை மற்றும் ஒரு செல்போன் போன்றவை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.