செங்கம் அருகே பஸ்சில் குட்கா கடத்தியவர் கைது
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குட்கா பான் மசாலா பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ்சில் குட்கா பான்மசாலா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து தனிப்படை போலீசார் கோணாகுட்டை அருகே அரசு பஸ்சை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது அதில் பயணித்த திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் (வயது 55) என்பவர் சோதனை செய்தபோது 32000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பான் மசாலா பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை செங்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்து ரமேசை போலீசார் கைது செய்தனர்.