உள்ளூர் செய்திகள்
கொலை

உத்தனப்பள்ளி அருகே மேற்கு வங்காள தொழிலாளி கத்தியால் குத்தி படுகொலை

Published On 2021-12-17 06:44 GMT   |   Update On 2021-12-17 06:44 GMT
உத்தனப்பள்ளி அருகே குடிபோதையில் தகராறு செய்த அசாம் வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே பாத்தகோட்டா பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு மேற்கு வங்காளம் ஜால்பைகுரி பகுதியை சேர்ந்த சம்பு தண்டி (வயது 37) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இதேபோல் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜிபு (27) என்ற வாலிபரும் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் 2 பேரும் கல்குவாரியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து சமையல் செய்து வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் ஜிபு அடிக்கடி மது குடித்து விட்டு சம்பு தண்டியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு சம்பு தண்டி, அறையில் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் தள்ளாடியப்படி ஜிபு வந்தார். திடீரென அவர், சம்பு தண்டியின் சாப்பாட்டு தட்டை காலால் எட்டி உதைத்தார். மேலும் சமம்பு தண்டியையும் திடீரென தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சம்பு தண்டி, அருகே கிடந்த காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து ஜிபுவை குத்தினார். இதில் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயம் அடைந்த ஜிபு  சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து வந்தனர். கொலையுண்ட ஜிபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பு தண்டியை , கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் தகராறு செய்த அசாம் வாலிபர், குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News