உள்ளூர் செய்திகள்
தற்கொலை

பிளஸ்-2 மாணவி தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது

Published On 2021-12-16 08:19 GMT   |   Update On 2021-12-16 08:19 GMT
கொடுமுடி அருகே பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் அருகே உள்ள கண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் சவுமியா (17).

இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெளியங்காட்டுப்புதூரில் உள்ள தனது பெரியப்பா ரவி என்பவரது வீட்டில் தங்கி சிவகிரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி சவுமியாவை அவரது பெரியப்பா வீட்டு வேலைகளை கற்று கொள்ள வேண்டும் என்று கூறி திட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி சவுமியா ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.

அந்த கடிதத்தில் பெரியப்பா உங்கள் மீது எந்த கோபமும் இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று உருக்கமாக எழுதி இருந்தார். இதையடுத்து ரவி தனது தம்பி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார். அவரும் வெளியங்காட்டுபுதூருக்கு விரைந்து வந்தார். பின்னர் அனைவரும் மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ரவி வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்த பெண்ணை மீட்டு விசாரித்தனர். அப்போது அது மாயமான மாணவி சவுமியா என்று தெரிய வந்தது.

இதையடுத்து மாணவியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவி உடலை மீட்டு போலீசார் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மேலும் மாணவி உயிரிழப்புக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News