உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு இடையூறின்றி கொடி கம்பங்கள் வைக்க அனுமதி வழங்க வேண்டும்- மாநகராட்சி கமிஷனரிடம் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மனு
தொழிற்சங்கங்கள் 1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஆகும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடியிடம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அரசு போக்குவரத்து கழகம் கோவை லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக செயல்படும் தொழிற்சங்கங்கள் ஆகும்.
எங்களின் தொழிற்சங்கங்கள் 1926-ம் ஆண்டு தொழிற்சங்க சட்ட விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஆகும். ஆலை வாயில் முன்பாக தொழிற்சங்கங்களின் கொடிக்கம்பம், தகவல் பலகை வைக்க தொழிற்சங்க சட்ட விதிகளின்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் கோவை லிமிடெட் திருப்பூர் நுழைவு வாயில் முன்பு சட்ட விதிகளின்படி வைக்கப்பட்டுள்ள சங்கங்களின் கொடி கம்பங்களையும், தகவல் பலகைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே அமைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எங்களின் தொழிற்சங்கங்கள் முறைப்படி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு, தகவல் பரிமாறிக்கொள்ள வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் தகவல் பலகைகளையும், கொடி கம்பங்களையும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி தொடர்ந்து வைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.