உள்ளூர் செய்திகள்
தற்கொலை முயற்சி

தலைமை ஆசிரியரின் ‘டார்ச்சரால்’ அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி

Published On 2021-12-08 15:55 IST   |   Update On 2021-12-08 15:55:00 IST
தலைமையாசிரியரின் தொந்தரவால் ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1084 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 34 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில் விலங்கியல் துறையில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில் (36). இவர் நாட்டுநலப்பணி திட்ட அலுவலராகவும் பணியாற்றியும் வருகிறார்.

செருப்பு அணிந்து கொண்டு தலைமையாசிரியர் அறைக்கு வரக்கூடாது என்ற தலைமை ஆசிரியரின் உத்தரவுக்கு ஆசிரியர் செந்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், செந்தில் சமர்ப்பித்த பாடக்குறிப்பேட்டில் தலைமையாசிரியர் சித்ரா கையெழுத்திடாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆசிரியர் செந்தில் நேற்றுகாலை பள்ளியில் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். அவரை சக ஆசிரியர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியரை நலம் விசாரிக்க தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மருத்துவமனையில் திரண்டனர். தலைமையாசிரியர் சித்ரா மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வதாகவும், செருப்பு அணிந்து கொண்டு ஆசிரியர்கள் தலைமையாசிரியர் அறைக்கு வரக்கூடாது, வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை வேறு பணி செய்ய சொல்வது போன்ற செயல்களால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக சகஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். ஆசிரியர்கள் மீது விரோதப்போக்கை கடைப்பிடிக்கும் தலைமையாசிரியர் மீது கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தலைமையாசிரியரின் தொந்தரவால் ஆசிரியர் ஒருவர் பள்ளியிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News