உள்ளூர் செய்திகள்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி மணல்மேட்டில், பா.ஜ.க.வினர் மாட்டு வண்டியில் ஊர்வலம்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி மணல்மேட்டில், பா.ஜ.க.வினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர். 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மணல்மேட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி பா.ஜ.க.வினர் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு பா.ஜ.க. விவசாய அணி தலைவர் குஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் தங்க.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செயலாளர் தங்க.வரதராஜன் கலந்து கொண்டு மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த மணல்மேடு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி மாட்டுவண்டி ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என்றும், மீறி நடத்தினால் கைது செய்வோம் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து மாட்டு வண்டி ஊர்வலத்தை கைவிட்டு பா.ஜ.க.வினர் மணல்மேடு பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், நகர தலைவர் மோடி கண்ணன், மாவட்ட பொது செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் நேதாஜி, தமிழ்வாணன், சுந்தரவடிவேல் மற்றும் 20 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.