செய்திகள்
திண்டிவனத்தில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.97 ஆயிரம் அபேஸ்
திண்டிவனத்தில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து ரூ.97 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திண்டிவனம்:
திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 50). அரசு பள்ளி ஆசிரியரான இவர் நேற்று மோட்டர் சைக்கிளில் அவரது தாய் சந்திராவை அழைத்துக்கொண்டு நேரு வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு பணம் எடுக்க சென்றார். பின்னர் சந்திராவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.97 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அதை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தபோது சாவி மறுபுறம் நழுவி விழுந்தது.
பின்னர் அதை சரவணன் எடுத்துக்கொண்டு தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டுக்கு சென்று மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரூ.97 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை அபேஸ் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து ரூ.97 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.