விருதுநகர் மாவட்டத்தில் 833.7 மி.மீ. மழை- 13 வீடுகள் இடிந்து சேதம்
விருதுநகர்:
தமிழகம் முழுவதும் நேற்று கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்திலும் நேற்று மதியம் முதல் மழை பெய்தது. இரவு வரை நீடித்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 112 மி.மீ. மழை பெய்ததாக பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக காரியாபட்டியில் 37.4 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 833.7 மி.மீ. மழை இன்று காலை வரை பெய்துள்ளது.
மழையின் காரணமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் சாத்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்த பஸ்களை வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
கனமழையின் காரணமாக மாவட்டத்தில் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. விருதுநகர் வட மலைக்குறிச்சி கண்மாய் நிரம்பி விட்டதால் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்மாய் திறக்கப்பட்டால் கவுசிகமாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் அங்கு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.