விஷம் தின்றுவிட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த காதல் ஜோடி - சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 15-ந் தேதி திடீரென்று மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.
இந்த நிலையில், அந்த சிறுமிக்கும் பெத்த நாயக்கன்பாளையம் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் (19) என்பவருக்கும் காதல் இருந்து வந்ததாகவும், அதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சிறுமி மீது பெற்றோர் புகார் செய்திருந்த தால் காதல் ஜோடியை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர்.
இதையடுத்து நேற்று காதல் ஜோடி வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றனர்.
போலீசார் விசாரித்த போது, இருவரும் விஷத் தன்மை கொண்ட அரளி விதையைத் தின்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இருவரையும் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் வாழப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.