செய்திகள்
தற்கொலைக்கு முன் ஆசிரியர் எழுதிய கடிதம்

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்- உருக்கமான கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் தற்கொலை

Published On 2021-11-25 04:56 GMT   |   Update On 2021-11-25 05:44 GMT
மாணவி இறப்புடன் தன்னை தொடர்புபடுத்தியதை தாங்க முடியாமல் துயர முடிவை எடுப்பதாக கணித ஆசிரியர் தற்கொலைக்கு முன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.
துறையூர்:

கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி சாவதற்கு முன்பு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில், நான் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்கிறேன். பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்கணும் என உருக்கமாக கூறியிருந்தார். இது கரூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குறித்து இதுவரை முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே அந்த மாணவி படித்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



இந்த நிலையில் மாணவி படித்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் (வயது 42) என்பவர் திடீரென நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் நேற்றைய தினம் திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுபட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் வீட்டில் தற்கொலை செய்தார்.

இந்த சம்பவம் துறையூர் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூரில் தற்கொலை செய்த பள்ளி மாணவியின் சாவுக்கு சரவணன் காரணமாக இருந்திருக்கலாம். கைதுக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து ஒரு டைரியை துறையூர் போலீசார் கைப்பற்றினர். அதில், மாணவியின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என மாணவர்கள் சந்தேகிப்பதுடன், கிண்டல் செய்கின்றனர். இதனால் என் மனம் உடைந்து விட்டது என எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் வெங்கமேடு போலீசாரிடம் கேட்டபோது, மாணவியின் இறப்புக்கு அந்த ஆசிரியர் காரணம் இல்லை. அவர் கண்டிப்பான ஆசிரியர் என விசாரணையின்போது மாணவர்கள் தெரிவித்தனர். ஆகவே புலன் விசாரணை தொடர்கிறது என்றனர்.


Tags:    

Similar News